search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை வளர்ப்பு"

    • குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
    • பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

    குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:

    இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    காது கொடுத்து கேளுங்கள்:

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:

    குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    தினமும் நேரம் ஒதுக்குங்கள்:

    குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.

    கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:

    பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.

    • ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
    • தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    தந்தை...! இந்த ஒற்றை வார்த்தைக்கு உரியவரிடம் இருந்துதான் ஒவ்வொருவருக்கும் அன்பு, அறிவு, ஒழுக்கம், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க பெறுகின்றன. ஆம்... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகேற்ப அவரது அறிவுரை, கண்டிப்பும்தான் ஒவ்வொருவருக்கும் நல்ஒழுக்கம், சிறப்பான வாழ்க்கையை பெற்றுத்தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்தாலும் அந்த தாயையும், பிள்ளையையும் சேர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் சுமந்து செல்லக்கூடியவர்கள்தான் தந்தையர்கள்.

    பிள்ளைகளின் பார்வைக்கு வேண்டுமானால் தங்களது தந்தை ராஜாவாக இல்லாமல் போகலாம். ஆனால் தந்தையானவர்களுக்கு தங்களது பிள்ளைகள் என்பவர்கள் இளவரசியாகவும், இளவரசனாகதான் தெரிவார்கள். அதனால்தான் ஒவ்வொரு தந்தையும் தான் கஷ்டப்பட்டதுபோல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது வலி, சோகத்தையும் மறந்து பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.

    இப்படி தன் பிள்ளைக்காக எது நல்லது, கெட்டது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் தந்தையர் கடவுளுக்கும் நிகரானவர்கள் என்றே வர்ணிக்கப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்-தந்தையருக்கு பிறகுதான் கடவுளும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதனால் தாய்-தந்தையரை மதித்து நடக்காமல், முதுமையில் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு நீங்கள் எவ்வளவு நல்லகாரியங்கள் செய்தாலும் அது பிரயோஜனம் அற்றவைதான். தாய்-தந்தையர் இருக்கும்போது அவர்களை கவனிக்காமல் பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.

    அந்த வகையில்அன்னையர்களுக்கு போல் தந்தையருக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன்னை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்ஸ் என்பவர் 1910-ம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இதைதொடர்ந்து அமெரிக்க அரசு ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்து கொண்டாடியது.

    இதுவே பின்னாளில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பரவி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாட்டம் நாள் வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஜூன் மாத 3-வது ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.

    • இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள்.
    • தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.

    உலகின் கண்மணிகள் குழந்தைகள். இப்படிபட்ட குழந்தைகள் தங்களது பருவத்தில் காலையில் புத்தகப்பையை சுமந்துகொண்டு பள்ளிக்கு சென்று கல்வி கற்பதும், மாலையில் வீட்டிற்கு வந்து சிறிதுநேரம் விளையாடுவதும் என்று எவ்வித கவலைகளும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டியவர்கள். ஆனால் சமூகத்தில் இன்றளவும் குடும்பத்தின் வறுமை எனும் சுமையை, படிக்கும் வயதிலான சில குழந்தைகளின் தலையில் ஏற்றி அவர்களை வேலைக்கு அமர்த்தும் வேதனை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நம் நாட்டில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் சில நாடுகளில் குழந்தைகளின் வயது மாறுப்பட்டு சட்டங்கள் உள்ளன. மேலும் குழந்தை தொழிலாளர் உருவாவதை தடுக்க பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. அத்துடன் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணிகளில் குழந்தைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு குழந்தைகள் நல அமைப்புகள், இயக்கங்களும் கைகோர்த்து செயல்படுகின்றன.

    இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள். அதனால் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதும், அதிகரிப்பதும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். மேலும் நாடு எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த சமூகத்தை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி விளையாடும், படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் குடும்ப வறுமை, கல்வியின் அவசியம் உணராமை, போதிய விழிப்புணர்வு இல்லாமைதான்.

    எல்லா குழந்தைகளும் கட்டாய கல்வி பெறவேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பது நம் கடமை என்பதை உணரவேண்டும். வறுமை காரணமாக குழந்தைகளை பணிக்கு அனுப்புதல் கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.

    பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும். இருசாராரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் குழந்தை தொழிலாளர் உருவாவதைத் தடுக்க முடியும்.

    அந்த வகையில் உலகளவில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும், அதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி(இன்று) உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, உரிய கல்வி கிடைக்க வழிவகை செய்வது அனைவரின் கடமையாகும்.

    • குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
    • பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம்.

    எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

    இதுபோல பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது சற்று சிரமமான ஒன்று. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கூட பாதிக்கப்படலாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கலாம், குழந்தைகள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள், அதை எப்படிச் சரிசெய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

    புதிதாகப் பள்ளியில் சேரும்போது, சில குழந்தைகள் அந்தப் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது அடம்பிடிப்பார்கள். என்றாலும், தொடர்ச்சியாக 20 நாள்கள் பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கு அந்தச் சூழல் பழகிவிடும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு சூழலில் பள்ளி செல்ல மீண்டும் அடம்பிடிக்கலாம். சமாதானம் செய்து அனுப்பிவைத்தால் சூழலை ஏற்றுக்கொள்வார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால், ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுத்து, சில உடல்நிலைக் காரணங்களைச் சொல்லி, தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முயல்வார்கள். ஏதோ உடல்நல பாதிப்பு என நினைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால், எல்லாம் நார்மலாக இருக்கும். இதுவே குழந்தைகளின் அன்றாட நிகழ்வாகும்போது பெற்றோர் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளை அவசியம் ஆராய வேண்டும்.

    * பள்ளிக்குச் செல்வதால் அம்மாவைப் பிரியவேண்டியிருக்கும், இதனால் தனக்கோ, தன் அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயத்துக்கு ஆளாகலாம். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனவே, இது 'ஸ்கூல் போபியா' கிடையாது; பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கான பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    * சில குழந்தைகள் மென்மையான மனம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் பிற குழந்தைகளின், ஆசிரியர்களின், ஸ்கூல் வேன் டிரைவர், ஆயா ஆகியோரின் கேலி, கிண்டல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ ஆளாகியிருக்கலாம். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.

    * தான் பள்ளி சென்றவுடன் தன் தம்பி அல்லது தங்கை மட்டும் அம்மாவுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல், தானும் வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர்.

    * சில குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் கற்றல் குறைபாடு ஏற்படலாம். இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளைக் கண்டிக்கும்போது பள்ளிக்குச் செல்ல அவர்கள் நிச்சயம் மறுப்பார்கள்.

    * உடல்நிலை பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நீண்ட நாள்கள் விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு, மீண்டும் பள்ளிச் சூழலை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள்.

    * குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் `வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, தலை வலிக்கிறது' போன்ற உடல்ரீதியான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க முயல்வார்கள். 'சரி லீவ் எடுத்துக்கோ' என பெற்றோர் சொன்ன சில மணி நேரத்தில் இயல்பான சூழலுக்கு வந்துவிடுவார்கள்.

    * மனரீதியான பாதிப்பு ஏதேனும் அடைந்திருந்தால், தூக்கத்தில் அது அலறல்களாக வெளிப்படும்.

    * ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களைப் பற்றி வீட்டில் அடிக்கடி குறை கூறலாம்.

    * பள்ளி சார்ந்த செயல்பாடுகளான வீட்டுப்பாடம் எழுதுவது, பாடம் படிப்பது போன்றவற்றை வீட்டிலிருந்தே தான் செய்துகொள்வதாகச் சொல்வார்கள்; கெஞ்சுவார்கள்.

    குழந்தைகள் இது போன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் உடனே இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

    தீர்வுகள்!

    பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'நீ ஸ்கூலுக்கு கண்டிப்பாகப் போகணும்' என வற்புறுத்தாமல், அவர்கள் ஏன் அடம்பிடிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் அடிக்கடி பள்ளி செல்ல மறுக்கிறார்கள் என்றால், முதலில் உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா எனக் குழந்தைகள்நல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை வழங்கி, முழுமையாகக் குணப்படுத்தி, அதன் பிறகு பள்ளிக்கு அனுப்பலாம்.

    சில குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாலியாக விளையாடலாம்; டி.வி பார்க்கலாம் என்றும்கூட பள்ளி செல்ல மறுப்பது உண்டு. எனவே, அவர்கள் விடுப்பு எடுக்கும் நாள்களில் டி.வி பார்க்கவும், விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தான் நினைத்தது நடக்கவில்லை எனும் பட்சத்தில் மறுநாள் அவர்களே ஸ்கூலுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

    `ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே மிரட்சியுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் வகுப்பு ஆசிரியரை அணுகி உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல், மிரட்டல்களுக்கு ஆளாகிறதா என்பதை விசாரித்துத் தீர்வு காணுங்கள்.

    பெற்றோரைப் பிரிய இயலாமல் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் எனில், பெற்றோரிடமிருந்து குழந்தை விலகியிருக்கச் சிறிது சிறிதாக எப்படிப் பழக்கப்படுத்தலாம் என ஆசிரியர்களுடன் கலந்து பேசலாம். பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம். அதன் பின்னர் சில தினங்கள் குழந்தையை வகுப்பறையில் அமரச் சொல்லி, 'அம்மா ஸ்கூல்லதான் இருப்பேன், லஞ்ச் டைம்ல பார்க்கலாம்' எனச் சொல்லி பள்ளியில் காத்திருக்கலாம். இப்படிப் படிப்படியாக பள்ளியின் சூழலையும் பெற்றோரின் பிரிவையும் குழந்தையை மனதளவில் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம்.

    பள்ளி செல்ல குழந்தை மறுப்பதற்கு என்ன காரணம் என்றே பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாத சூழலில், குழந்தைகள் உளவியல் அல்லது மனநல மருத்துவரை அணுகித் தீர்வு காண வேண்டும்.

    • இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
    • பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

    இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்குகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அப்படி கடுமையாக கண்டிப்பது உளவியல் ரீதியாக அவர்களை காயப்படுத்தும்.

    எப்போதும் அன்பாக நடத்தும் பெற்றோர் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கத்தை அவர்கள் மனதில் விதைக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் தவறு செய்யும்போது குரலை உயர்த்தி கடுமையாக பேசுவது மனதளவில் காயப்படுத்திவிடும்.

    அதன் அதிர்வு ஆழ் மனதில் பதிவாகிவிடும். அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும். உளவியல் ரீதியாக பலவீனமாகிவிடுவார்கள். பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.

    உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது.

    ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.

    • ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
    • கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

    பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.

    குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.

    கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.

    அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.

    எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.

    திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.

    வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.

    நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.

    • படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள்.
    • குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

    படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:

    5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.

    நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள்.

    படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும்.

    குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    • குழந்தைகள் செல்போனில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.

    குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள்.

    • பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே? என்பது பற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் எதுவெல்லாம் வெளிப்படையாக தெரியாதோ, அதை எல்லாம் இப்போது இணையதளம் மூலம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    எல்லா தகவல்களையும் செல்போன் மூலம் தனியாக தெரிந்து கொள்வதே குற்றத்தின் தொடக்கமாகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் (ஆப்ஸ்) அதிகரித்து விட்டன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் சிறார்களின் தொடர்புகள் அதிகரிக்கிறது. நல்லவர்களின் தொடர்பு மட்டுமின்றி கெட்டவர்களின் சகவாசமும் எளிமையாக கிடைக்கிறது.

    யாரென்றே தெரியாத நபர்களுடன் கூட பேச முடிகிறது. அவர்களை எளிதாக நம்பியும் விடுகிறார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர். அவருக்குதான் பொறுப்புகள் அதிகம். இது நவீன உலகம், குடும்பத்தில் தாய், தந்தை சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் சம்பாதிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். என் குழந்தையை நான் தான் பார்ப்பேன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வர வேண்டும். தாய், தனது பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

    அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்க வேண்டும். குழந்தைகளின் கையில் எந்த வகையான செல்போன் இருக்கிறது, அதில் என்னென்ன தகவல்களை அவர்கள் பார்க்கிறார்கள், தேவைக்கு தான் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள்தான் நடக்கின்றன. எனவே, பள்ளி செல்லும் பெண், ஆண் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அப்படியே பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், தாய் அல்லது தந்தை என ஒருவர் அவர்களுடன் இருந்து அதனை கண்காணிக்க வேண்டும்.

    ஆன்லைனில் வகுப்புகள் நடந்தால், அந்த வகுப்பு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக செல்போன்களை வாங்கிவிட வேண்டும். கண் பார்வையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர் தங்களின் வேலையை செய்யக்கூடாது. விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றார் போல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் விதித்து தான் ஆக வேண்டும்.

    செல்போனை "ஸ்கிரீனிங்" செய்தாலே பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். காலை, மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச வேண்டும். பேசுவது குறைந்ததன் விளைவாகத்தான், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் எப்படி இருந்தோமோ, அதுபோல் தான் இந்த காலத்திலும் பெண் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு படிப்பில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அதனை பிள்ளைகள் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும், எந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று கொடுப்பது கூடுதல் பலம்.

    எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல விதமாக போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தொடங்கும் முன்பு செய்தித்தாள்களில் வரும் குழந்தைகள் தொடர்பான குற்றச்சம்பவங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் தொட்டாலோ, தவறாக நடக்க முயன்றாலோ, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ அதுகுறித்து பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    குறிப்பாக 12 வயது முதல் 14 வயதுக்குள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் அனைத்தும் அவர்களின் மனதில் எளிதாக பதிந்து விடும். எனவே, அந்த காலகட்டத்தில் நல்லவிதமாக கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு எடுத்துரைத்தால் 18 வயதில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். அதுபோல், 21 வயதிற்கு பின்னர்தான் திருமணத்தை பற்றி பேச வேண்டும். பெற்றோரின் தூண்டுதலால், சிறிய வயதில் திருமணம் செய்வதாலும் ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    பெண் குழந்தைகளை மற்றொருவர் கட்டுப்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது. முதலில் பெற்றோர், 2-வதாக ஆசிரியர்கள், அடுத்தது பள்ளி, அடுத்தது சமூகம் இவை எல்லாம் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது சரியாக இருந்தால், பெண் குழந்தைகள் தவறான பாதையை தேர்வு செய்ய மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.

    குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:

    சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:

    குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

    ஊக்கத்தொகை வழங்குங்கள்:

    நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.

    பணம் சம்பாதிக்கும் வழிகள்:

    குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

    பண இலக்குகள்:

    குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.

    குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
    5 வயதில் குழந்தைகள் அதிகப்படியான ஆற்றலோடு இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் செயல்களின் வேகம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்களால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தவறு உங்கள் பக்கமும் இருக்கலாம். இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம்.

    அதிகப்படியான செல்லம் கொடுத்து, அவனது எந்த செயலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருப்பதன் காரணமாகக்கூட, அவனது சுட்டித்தனங்கள் அதிகமாகி இருக்கலாம். அவன் கேட்டதை எல்லாம் ‘இல்லை’ என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பது, விரும்பிய செயல்களை தாமதிக்காமல் நிறைவேற்றுவது போன்றவற்றை செய்தீர்களென்றால், இனி அவ்வாறு நடப்பதை தவிர்க்கவும்.

    குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

    அவனது செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும். இவை அனைத்தும் சரி செய்யப்பட்டாலும் பிரச்சினை தொடர்ந்தால், குழந்தையை உளவியல் நிபுணரிடம் மதிப்பீட்டுக்கு அழைத்துச் செல்வது சிறந்தது. ஒரு வேளை உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்டிவாக இருந்தால், அதற்குரிய பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அவனது செயல்களை நெறிப்படுத்த முடியும்.
    ×